விவசாயிகள் கோடை உழவு மேற்கொண்டால் மானியம்: திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?


கோவை: கிணத்துக் கடவு வட்டாரத்தில் பெய்த கோடை மழையை பயன்படுத்தி விவசாயிகள், தற்போது கோடை உழவு செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.

கோடை உழவு மேற்கொள்வதால், மானாவாரி விவசாய நிலத்தில் மண் அரிப்பு தடுக்கப் படுகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிர் சத்துகள் அதிகரிக்கிறது. தற்போது மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக, கோடை உழவு செய்யும் மானாவாரி விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.800 மானியமாக வழங்கப்பட உள்ளது.

இதில், ஒரு விவசாயிக்கு குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் முதல் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை உழவு செய்து மானியம் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்ட த்தில் விவசாயிகள் பயன் பெற சிட்டா, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் உழவு செய்யும் புகைப்படம் போன்ற ஆவணங்களை கொண்டு வந்து, வேளாண் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அல்லது உழவன் செயலியில் பதிவு செய்து பயன் பெறலாம்.

இத்தகவலை கிணத்துக் கடவு வேளாண் உதவி இயக்குநர் (பொறுப்பு) அருள்கவிதா மற்றும் வேளாண் துணை அலுவலர் மோகன சுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.

x