கோவை: உலகளவில் பிரசித்தி பெற்ற பொள்ளாச்சி இளநீர் மற்றும் தேங்காய்க்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான பயிலரங்கம் நேற்று பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதியில் விளையும் இளநீர், தேங்காய் மற்றும் தென்னை சார்ந்த பொருட்களுக்கு உலகளவில் வரவேற்பு இருப்பதால் புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வேளாண் பல்கலைக்கழகத்தின் விவசாய பொருளாதர துறை, தோட்டக்கலைத் துறை, விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி படிப்பு மையத்தின் பேராசிரியர்கள், புவிசார் குறியீட்டு பதிவுத்துறை அதிகாரிகள் மற்றும் தென்னை விவசாயிகள் கலந்து கொண்ட பயிலரங்கம் பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது.
பயிலரங்கத்தில் புவிசார் குறியீடு துறை உதவி பதிவாளர் சிவக்குமார், தென்னை சார்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், புவிசார் குறியீடு பெறுவதன் மூலம் அப்பொருளுக்கு கிடைக்கும் சட்ட பாதுகாப்பு, அதே பொருளில் போலியான பொருட்கள் சந்தைப்படுத்தலை தடுத்தல், உலகளவில் ஏற்றுமதி செய்வது குறித்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவங்களின் நட்பமைப்பின் தலைவர் சக்திவேல் கூறும்போது, “தென்னை சார்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு, தென்னை விவசாயிகள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, உலக அளவில் சந்தைப்படுத்தி பயன்பெற வேண்டும். அனைத்து தென்னை உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் தென்னையின் வரலாற்று சிறப்புகள் குறித்து உரிய விழிப்புணர்வை, புவிசார் குறியீட்டு துறை அதிகாரிகள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.