கோவை உலக புத்தொழில் மாநாட்டுக்கான இலச்சினை, சிறப்பு இணையதளம்: உதயநிதி தொடங்கி வைத்தார்


தமிழக புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்ககத்தின் சார்பில், கோயம்புத்தூரில் நடைபெற உள்ள 'உலக புத்தொழில் மாநாடு-2025' கான இலச்சினை மற்றும் சிறப்பு இணையதளத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழக புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சார்பில், கோயம்புத்தூரில் 'உலக புத்தொழில் மாநாடு-2025' நடைபெற பெறவுள்ளது. இதற்கான இலச்சினை, சிறப்பு இணையதளத்தை சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தை தொழில்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில், இளைஞர்கள் புதிய தொழில்களை தொடங்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தமிழக புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்துக்கு, புத்துயிரூட்டி அதன் செயல்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் விரிவுபடுத்தியுள்ளார். இதன் காரணமாக, தமிழகத்தில் இருந்து பதிவு செய்யப்படும் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2021-ம் ஆண்டு வரை 2,032 ஆக இருந்தது. தற்போது 4 மடங்குக்கு மேல் அதிகரித்து 10,800-ஐ கடந்துள்ளது. 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை மட்டும் 8,000-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சுமார் 49 சதவீதம் நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுபவை.

2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்கை அடைய புத்தொழில் துறை வளர்ச்சி ஒரு சாதனைக் குறியீடாகத் திகழ்கிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சமமான வளர்ச்சி என்ற முதல்வரின் இலக்கினை நோக்கமாக கொண்டு, கடந்த 4 ஆண்டுகளில் சென்னை, மதுரை, ஈரோடு, திருநெல்வேலி, ஓசூர், சேலம், கடலூர், தஞ்சாவூர், கோவை, திருச்சி ஆகிய 10 நகரங்களில் வட்டாரப் புத்தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

30,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசுத்துறைகள், பெரு நிறுவனங்கள், தொழில் வளர் காப்பகங்கள் பங்கேற்கும் 750 அரங்குகளை கொண்ட புத்தொழில் கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. மாநாட்டு இணையதளத்தில் மாநாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள், உரையாளர்கள் குறித்த தகவல்கள், கண்காட்சி அரங்கம் குறித்த விவரங்கள் தெரிந்து கொள்ள வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டுக்கு வருகை புரிபவர்கள் எளிமையாக பதிவு செய்யவும், முப்பரிமாண வசதியுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கும் அரங்க அமைப்பினை பார்வையிட்டு தங்களுக்கான அரங்குகளை பதிவு மேற்கொள்ளும் வகையிலும் இணையதளம் வடிமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தஅதுல் ஆனந்த், தமிழக புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைமை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்

x