சென்னை: முன்னாள் எம்எல்ஏ.க்களின் ஓய்வூதியம், மருத்துவப்படி உயர்த்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தையும், மருத்துவப்படியையும் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் வந்தன. அதன்படி, முன்னாள் சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படும்.
அதேபோல், குடும்ப ஓய்வூதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.15,000 என்பது, ரூ.17,500 உயர்த்தப்படும். தற்போது ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படி ரூ.75 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.