ராமநாதபுரம்: “பாலின பாகுபாடு உள்ளிட்ட அனைத்து வேறுபாடுகளும் களையப்பட வேண்டும், அப்போதுதான் ஒரு நாட்டை நல்ல நாடாக பார்க்க முடியும்,” என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட நீதித்துறை சார்பில் ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரியில் பாலின பாகுபாடு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை களைதல் தொடர்பான விழிப்புணர் நிகழ்வு இன்று (ஏப்.26) நடைபெற்றது.
இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா தலைமை வகித்து பேசும்போது: “இந்த மண் ராணி வேலுநாச்சியார் பிறந்த மண். அவர் 18-ம் நூற்றாண்டிலேயே ஒரு பெண் போரை நடத்த முடியும், நாட்டை ஆளமுடியும் என காட்டியவர். அப்படிப்பட்ட ராணி ஆண்ட மண்ணில் இப்படிப்பட்ட ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது சற்று வெட்கமாகவே உள்ளது.
அருகிலுள்ள எட்டயபுரத்தில் பிறந்த பாரதியார் மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் என பாடினார். காந்தியடிகள் ஒரு பெண் நள்ளிரவில் சுதந்திரமாக என்று நடக்கமுடிகிறதோ அன்று தான் நம் நாட்டிற்கு முழு சுதந்திரம் என்றார்.இந்த நேரத்தில் பாலின பாகுபாட்டை களைதல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை பேசுகிறோம்.
இத்தனை ஆண்டுகள் ஆகியும், இத்தனைபேர் படித்தும், இன்று மாநாடுபோல், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த வேண்டியுள்ளது. நாட்டின் முதலாவது பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக பி.வி.நாகரத்தினா வரவுள்ளார். அவரது முன்னெடுப்பால் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
இக்கருத்துகளை மாணவ,மாணவிகள் அறிந்து கொண்டு பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். முன்பெல்லாம் ஆண் குழந்தைகளுக்கு தனி சிரத்தை எடுத்து கவனித்தனர், பெண் குழந்தைகளை சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுத்துவிடுவர். பெரியார் போன்றோர் வந்து பெண் உரிமைக்காக போராடினர். அதேபோல் சட்டமேதை அம்பேத்கர் பெண் உரிமைகளுக்காக போராடியவர்.
பெண் ஒருவர் என்று சுதந்திரமாக நடக்க முடிகிறதோ, சமமாக நடத்ப்படுகிறாரோ அன்று தான் அந்த நாடு முன்னேறிய நாடாக கருதப்படுகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது மகிழ்ச்சி குறியீடை வைத்துத்தான் கூறுகின்றனர். அப்படி பார்க்கும்போது சில நாடுகளைவிட நாம் பின்தங்கி உள்ளோம். எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும்.
நமக்குள் உள்ள சாதி வேறுபாடு உள்ளிட்ட அனைத்து வேறுபாடுகளும் களையப்பட வேண்டும். அப்போதுதான் ஒரு நாட்டை நல்ல நாடாக பார்க்க முடியும். அரசியல் அமைப்பு சட்டத்தில் மூன்று பிரிவுகள் பெண்கள் சமஉரிமை, சமத்துவத்தை கூறும் வகையில் உள்ளன.
பெண் பிறப்பில் மட்டுமல்ல, கருவில் இருக்கும்போதே கொல்லப்படுகின்றனர்.
பெண் குழந்தை என்று தெரிந்தால் கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் பழக்கம் இங்கு உள்ளது. அதனால் நம் நாட்டில் கருவில் இருக்கும்போது என்ன குழந்தை என சொல்லக்கூடாது என சட்டம் கூறுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரசவத்துக்கு முன்பே என்ன குழந்தை என கூறிவிடுகின்றனர். சமுகத்தின் கடைநிலையில் உள்ளவர்களிடமே அதிகமாக பாலியல் வன்முறைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அப்படி இல்லை, சமீபகாலமாக உயர் பதவிகளில் உள்ளவர்களும் பாலியல் வன்முறைகளில் சிக்கி வருகின்றனர். அவர்களும் தண்டிக்கப்பட்டுள்ள சம்பவங்களும் நடந்துள்ளது. பெண்கள் மீதான பாகுபாடுகள் களையப்பட வேண்டும். சட்டத்தில் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் வேலை அதிகமாக கொடுத்ததற்காக உயர் அதிகாரி மீது புகார் கூறிய சம்பவங்களும் நடந்துள்ளது. இதன் உண்மைத்தன்மையை பாலின பாகுபாடு கமிட்டி விசாரணை செய்யும். இந்த விழிப்புணர் நிகழ்வில் கற்ற கருத்துகளை அனைவருமு் வெளி உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும்,” என்று நீதிபதி பேசினார்.
நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.கே.மெகபூப் அலிகான் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.சென்னை ஐஐடி பேராசிரியர் கல்பனா, மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் கரோலின் நேசபாய், பேராசிரியர் ஆன் நிர்மலா கர், மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் அகஸ்டின் ஜூலியன் லெஸ்மே ஆகியோர், பாலின பாகுபாடை களைதல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கருத்துக்களை வழங்கினர்.
ராமநாதபுரம் தலைமைக் குற்றவியல் நீதிபதி மோகன்ராம் உள்ளிட்ட நீதிபதிகள், ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்க செயலாளர் முத்து துரைச்சாமி மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட மகளிர் நீதிமன்ற அமர்வு நீதிபதி கே.கவிதா நன்றி கூறினார்.