“புதுச்சேரியிலும் திமுக ஆட்சி உதிக்கும்” - எதிர்க்கட்சித் தலைவர் சிவா நம்பிக்கை


புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் சிவா

புதுச்சேரி; புதுச்சேரியில் திமுக ஆட்சி உதிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான சிவா தெரிவித்தார்.

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் 72-வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி திமுக மற்றும் திமுக மருத்துவ அணி சார்பில், இலவச மருத்துவ முகாம் உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட காந்தி வீதியில் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் தொடர்பான பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

முகாமை தொடங்கி வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசுகையில், "மக்கள் நலப் பணிகள் மூலம், திமுக தொடர்ந்து பொதுமக்களின் நலனுக்காக உழைத்து வருகிறது. புதுச்சேரியில் பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதில்லை. கலைஞரின் காப்பீட்டுத்திட்டம் போல புதுச்சேரியில் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. பிரதமர் மோடி கொண்டு வந்த ஆயுஷ்மான் காப்பீட்டுத்திட்டத்தால் புதுச்சேரியில் யாரும் பயன்பெறவில்லை.

காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளுக்கு கிடைக்கப்பெறும் தொகையை அதிகப்படுத்திய போதும், அதனால் எந்த ஆதாயமும் பயனும் மக்களுக்கு இல்லை. ஆனால், புதுச்சேரி மக்களுக்கு இங்கு கிடைக்காத அல்லது மறுக்கப்படும் சிகிச்சைகளுக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறப்பான நவீன மருத்துவ சிகிச்சையளிக்க முன்வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். எனவே புதுச்சேரியில் மக்கள் விரும்பும் திமுக ஆட்சி உதிக்கும்" என தெரிவித்தார்.

x