சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 பெண்கள் உடல் சிதறி உயிரிழப்பு


விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

சிவகாசியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று காளையார்குறிச்சியில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில், 30க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 50க்கும் மேற்பட்டோர் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும்போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 2 அறைகள் சேதமடைந்தன. அங்கு பணியாற்றிய அடையாளம் தெரியாத 3 பெண்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அனைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி இருந்த அடையாளம் தெரியாத மூன்று பெண்களின் சடலம் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் காயமடைந்த ஏழு பேர் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து எம். புதுப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x