திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே அரசு பள்ளியில் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய அரசுப்பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை பணியிடமாற்றம் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுதாகர் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் அவரது மனைவியும் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுதாகர் தனது திருமண நாளை அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் முன்னிலையில் தனது மனைவியுடன் கேக்வெட்டி கொண்டாடினார். வெட்டிய கேக்கை மனைவிக்கு ஊட்டி மகிழ்ச்சியடைந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் பிறந்த நாள் கொண்டாட்டம், திருமண நாள் கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது தொடர்ந்து நடந்து வருவதாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, அரசுப்பள்ளியில் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியது தொடர்பாக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திருமலைவாசன் நேரில் விசாரணை நடத்தினார். இதையடுத்து, அரசுப்பள்ளியில் திருமண நாளை கொண்டாடிய ஆசிரியர் சுதாகர் உதயேந்திரம் அரசு பள்ளிக்கும், இதை அனுமதித்த பள்ளி தலைமை ஆசிரியை சரோஜினி வெங்கிளி பள்ளிக்கும் பணியிடமாற்றம் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திருமலைவாசன் உத்தரவிட்டார். மேலும், இது போன்ற செயல்களில் அரசு பள்ளி ஆசிரியர்கள் இனி ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.