தஞ்சாவூர்: வங்கிகளில் முன்பு இருந்ததைப் போல, விவசாயிகளின் நகைக் கடனுக்கு வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பிக்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், வேளாண்மை இணை இயக்குநர் கோ.வித்யா, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் தமிழ்நங்கை உட்பட அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், விவசாயிகள் பேசியது: பந்தநல்லூர் பகுதியில் துணை மின் நிலையம் இல்லாததால், சீரான மின் விநியோகம் கிடைக்கவில்லை. இதனால் மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதடைகின்றன. 2 ஆண்டுகளுக்கு முன் துணை மின் நிலையம் அமைக்க அரசால் அறிவிப்பு வெளியாகியும், இதுவரை பணிகளை தொடங்கவில்லை. எனவே, அப்பகுதியில் குறைந்தழுத்த மின் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும்.
மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் சிறப்பு தூர் வாரும் பணிகள் பல இடங்களில் முறையாக நடைபெறவில்லை. இப்பணிகளை கண்காணிக்க விவசாயிகள் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும். கடந்த காலங்களைப் போன்று, அந்தந்த பகுதியில் உள்ள பாசனதாரர்கள் சபை மூலம் தூர் வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
பட்டுக்கோட்டை வட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து, மதுக்கூர் அல்லது துவரங்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் ஏற்படுத்த வேண்டும். பேராவூரணி பகுதியில், தென்னையில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வெள்ளை ஈ, காண்டாமிருக வண்டு, சிகப்பு கூன் வண்டு போன்றவற்றை கட்டுப்படுத்த நிரந்த தீர்வு காண வேண்டும்.
பேராவூரணி அருகே பெருமகளூர் ஏரியில் உள்ள தண்ணீரை சேமிக்க வேண்டும். வங்கிகளில் விவசாயிகளின் நகைக்கடனை முன்புபோல வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பித்துக்கொள்ளும் நடைமுறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கிப்பட்டி பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்கால், கட்டளைமேட்டு வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் பகுதிகளில் உள்ள மதகுகளை உடனே சீரமைக்க வேண்டும்.
நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.5,000 என விலை அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவாக தனியார் வியாபாரிகளால் உளுந்து, பச்சைப் பயறு ஆகியவை கொள்முதல் செய்யப்படுகின்றன. எனவே, அரசே குறைந்தபட்ச ஆதார விலைக்கு அதிகமாக விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.