கொடைக்கானலில் வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம்: மலை கிராம மக்கள் மகிழ்ச்சி


கொடைக்கானல்: நாடு சுதந்திரமடைந்து 78 ஆண்டுகளுக்குப் பிறகு கொடைக்கானலில் சாலை வசதி இல்லாத மலைக் கிராமங்களான சின்னூர், பெரியூருக்கு முதல்முறையாக ரேஷன் பொருட்கள் குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அவர்கள் வீடுகளில் விநியோகிக்கப்பட்டன.

கொடைக்கானலில் 400 ஆண்டுகள் பழமையான வெள்ளகெவி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர், பெரியூர் கிராமத்தில் நாடு சுதந்திரமடைந்த காலத்தில் இருந்தே சாலை வசதி இல்லை. இக்கிராமத்தினர் ரேஷன் பொருட்களை வாங்க 7 கி.மீ. தொலைவுள்ள வட்டக்கானல் பகுதிக்கு சாலை வசதி இல்லாததால், நடந்தே செல்ல வேண்டிய நிலை இருந்தது. வேளாண் விளை பொருட்களை இன்று வரை தலைச்சுமையாகவும், கழுதை அல்லது குதிரை மூலமாகவும் எடுத்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், இக்கிராம மக்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்வது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு ஆட்சியர் சரவணன், வனப் பகுதி வழியாக பல கி.மீ. தூரம் நடந்து சென்று ஆய்வு செய்தார். அப்போது கிராம மக்கள், ரேஷன் பொருட்களை கிராமத்துக்கே கொண்டு வந்து நேரடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி மற்றும் எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோரது ஆலோசனைப்படி, இந்த மலைக் கிராம மக்களுக்கு ‘இல்லம் தேடி ரேஷன்’ என்ற திட்டத்தில் அவர்கள் கிராமத்துக்கே சென்று பொருட்களை வழங்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

நாடு சுதந்திரமடைந்து 78 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மலைக் கிராம மக்களுக்கு இந்த மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் குதிரைகள் உதவியுடன் கொண்டு செல்லப்பட்டன. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை கிராம மக்களின் வீடுகளுக்கே சென்று விநியோகித்தனர். இதனால் மலைக் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல, கடப்பாறைக்குழி மற்றும் சின்னூர் பழங்குடியினர் காலனி மக்களுக்கும் அவர்களது வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

x