என்எல்சி தொழிற்சங்க தேர்தல்: திமுகவின் தொமுச வெற்றி, அதிமுக சங்கத்துக்கும் அங்கீகாரம்!


நெய்வேலி: என்எல்சி நிறுவனத்தில் நடந்த தொழிற்சங்க தேர்தலில் திமுகவின் தொமுச மற்றும் அதிமுகவின் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக தேர்வாகியுள்ளது.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான ரகசிய வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. என்எல்சியில் மொத்தமுள்ள 6,800 தொழிலாளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த இந்தத் தேர்தலில் 6 தொழிற் சங்கங்கள் போட்டியிட்டன. கடந்த 16ம் தேதி தொழிற்சங்கங்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தன. அதைத்தொடர்ந்து என்எல்சி தொழிலாளர்களிடம் தொழிற்சங்கங்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன.

இத்தேர்தலில் திமுகவின் தொழிற்சங்கமான தொமுசவுக்கு தொழிலாளர் விடுதலை முன்னணி, ஐஎன்டியுசி, மூவேந்தர் முன்னேற்ற தொழிற்சங்கம், தமிழக வாழ்வுரிமைச் சங்கம், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்டவை ஆதரவு அளித்தன.

இந்த தேர்தலில் மொத்தம் 6137 பேர் வாக்களித்தனர். மொத்தத்தில் 97 சதவீத வாக்குகள் பதிவாகின. பின்னர் துப்பாக்கி ஏந்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 9-வது வட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு எடுத்துச் சென்று நேற்று இரவு 9 மணி அளவில் வாக்குகள் என்னும் பணி நடைபெற்றது.

இந்த தேர்தலில் திமுகவின் தொமுச 2507 வாக்குகள் பெற்று முதலிடத்தில் வெற்றி பெற்றது. அதேபோல் அதிமுகவின் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் 1389 வாக்குகள் பெற்று என்எல்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அங்கீகாரம் பெற்றது.

இத்தேர்தலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக இருக்கும். இந்த தொழிற்சங்கங்களே என்எல்சி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழிற்சங்க தேர்தல் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

x