சென்னை: சட்டமன்றத்தில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலாக அமைச்சர் ரகுபதி உயிரி மருத்துவ கழிவுகள் தொடர்பான மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இதனால் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டமன்றத்தில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலாக அமைச்சர் ரகுபதி உயிரி மருத்துவ கழிவுகள் தொடர்பானமசோதாவை தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதாவை செந்தில் பாலாஜி தாக்கல் செய்வார் என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட நிலையில், அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்துள்ளது சலசலப்பை உருவாக்கியுள்ளது. சட்டசபையின் இறுதி நாளன்று மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. திடீரென இந்த மசோதாவை ரகுபதி தாக்கல் செய்திருப்பதால், செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்தது என்ன? - அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு, கடந்த 2024 செப்டம்பர் 26-ம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஒருநாள் இடைவெளியில் அவர் மீண்டும் அமைச்சராகவும் பதவியேற்றார்.
இந்த நிலையில், அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ‘தற்போது அமைச்சராக இல்லை என்று கூறி ஜாமீ்ன் பெற்ற செந்தில் பாலாஜி, ஜாமீன் கிடைத்த ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அமைச்சராகி உள்ளார். இதனால், அவருக்கு எதிராக சாட்சி அளிக்க யாரும் முன்வரமாட்டார்கள் என்பதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் சாட்சிகளை கலைக்க முற்படுவதாக அமலாக்கத் துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில், ‘சாட்சிகளை கலைப்பார் என்ற அச்சம் இருந்தால், இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்’ என வாதிடப்பட்டது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், ‘அவர் அமைச்சராக பதவியேற்பதற்காகவோ அல்லது மெரிட் அடிப்படையிலோ அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை. அரசமைப்பு சட்டத்தின் 21-வது பிரிவை மீறியதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் வழங்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் அவர் அமைச்சரானதை ஏற்க முடியாது. அமைச்சராக இல்லை என்பதால்தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. எனவே, அவருக்கு ஜாமீன் வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா?’ என்று கேள்வி எழுப்பினர்.
பின்னர், இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கருத்தை தெரிவிக்க ஏப்.28 வரை கால அவகாசம் வழங்கி, விசாரணையை ஒத்திவைத்தனர்.