ஆட்சிக்கு வந்தால் 3.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என சொன்னது நினைவிருக்கிறதா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி


சென்னை: ஆட்சிக்கு வந்தால், 3.50 லட்சம் இளைஞர்கள் காலியாக உள்ள பணியிடங்களில் நியமிக்கப்படுவர் என தேர்தல் அறிக்கையில் சொன்னது நினைவிருக்கிறதா முதல்வர் ஸ்டாலின் அவர்களே என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாடு அரசில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வெறும் 3935 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது ஸ்டாலின் மாடல் அரசு. இந்த தேர்வை நம்பி வருடக்கணக்கில் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் இது!

ஆட்சிக்கு வந்தால், 3.50 லட்சம் இளைஞர்கள் காலியாக உள்ள பணியிடங்களில் நியமிக்கப்படுவர் என தேர்தல் அறிக்கையில் சொன்னது நினைவிருக்கிறதா மு.க.ஸ்டாலின்?

விஏஓ உள்ளிட்ட அரசுப்பணிகளில் சேர வேண்டும் என்பது பல ஏழை எளிய குடும்பத்தில் இருந்து வரும் இளைஞர்களின் கனவு. பணியிடங்கள் இருந்தும் அதனை நிரப்பாமல் வஞ்சிப்பது, இளைஞர்களின் கனவை சிதைக்கும் செயல். கொடுத்த வாக்குறுதிக்கும், மாணவர்களின் உழைப்புக்கும் கொஞ்சம் கூட மதிப்பளிக்காமல், "அரசு" என்பதன் இலக்கணத்தையே மறந்து, கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

உடனடியாக குரூப் 4 பணியிடங்களை 10,000-ஆக உயர்த்திடுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

x