அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் எம்.பி தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து


சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி-யான தயாநிதி மாறன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்த தயாநிதி மாறன், அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், செய்தித்தாள்களி்ல் வெளியான செய்திகளின் அடிப்படையிலயே பேசியதாகவும், தேர்தல் பிரசாரத்தின்போது பேசும் பேச்சுகள் அவதூறாகாது என்பதால் தனக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும், எனக் கோரியிருந்தார். இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுதாரரான பழனிசாமிக்கு எதிராக திமுக எம்பி தயாநிதிமாறன் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

x