சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக பதியப்பட்ட 2 வழக்குகளில் இருந்து தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் மகனை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பி்த்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 1996- 2001 மற்றும் 2006 - 2011 திமுக ஆட்சிகாலங்களில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 21.22 லட்சம் அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக 2004-ம் ஆண்டு ஒரு வழக்கும், ரூ. 3 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக 2011-ம் ஆண்டு மற்றொரு வழக்கும் தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அவரது மனைவி பி.செந்தமிழ்செல்வி, மகன் பி.கதிரவன் ஆகியோர் மீது லஞ்சஒழிப்புத் துறை போலீஸார் பதிவு செய்திருந்தனர்.
இந்த 2 வழக்குகளையும் விசாரித்த கடலூர் நீதிமன்றம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவரது மனைவி பி.செந்தமிழ்செல்வி மற்றும் மகன் பி.கதிரவன் ஆகியோரை விடுவி்த்து கடந்த 2007 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுகளை எதிர்த்து தமிழக லஞ்சஒழிப்புத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தரப்பில், குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துக்களையும் மனுதாரர்களின் சொத்துக்களாக கணக்கில் எடுத்துக்கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டுதான் கடலூர் நீதிமன்றம் அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது என வாதிடப்பட்டது.
ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், இதுதொடர்பாக திரட்டப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.வேல்முருகன், இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.
இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள நீதிபதி, இந்த வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என கடலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.