சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாகவே ஆளுநர் கூட்டிய மாநாட்டில் துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை என்று அமைச்சர் கோவி.செழியன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ‘துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என அரசு பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்’ என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இதற்குமுன் அவர் கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற துணைவேந்தர்கள் இப்போது ஏன் பங்கேற்கவில்லை? தமிழக சட்டப்பேரவையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காததால், அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. ஆளுநரால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தது.
இந்தத் தீர்ப்புக்குப் பிறகுதான் தமிழக அரசுடன் மல்லுக்கட்ட, துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி கூட்டியிருக்கிறார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அறிந்து மாநாட்டைத் துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளனர். இதற்கு எப்படி மாநில அரசு பொறுப்பாகும், ஆளுநர் ரவிதான் சட்டத்தை மதிக்காமல் மாநாட்டைக் கூட்டினார் என்றால், துணைவேந்தர்களும் அப்படியே நடக்க வேண்டுமா? தமிழக அரசு எதையும் சட்டரீதியாகத்தான் எதிர்கொள்ளும். அப்படித்தான் மசோதாக்கள் விவகாரத்தில் வெற்றி பெற்றோம்.
ஆளுநர்கள் அந்தந்த மாநிலப் பல்கலைக்கழகங்களில் வேந்தராக இருப்பது குறித்து அரசமைப்புச் சட்டத்தில் எதுவும் சொல்லவில்லை. குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், குடியரசுத் துணைத்தலைவரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு ஊட்டி சென்றுள்ளார் ஆளுநர் ரவி.
மோடி பிரதமர் ஆனபிறகு பாஜகவுக்குப் பிடிக்காத, அவர்களை எதிர்க்கும் மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம் குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறார். அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது என்று சொன்ன மோடியின் அரசுதான், ஆளுநர்களை வைத்து அரசியல் செய்கிறது. மிரட்டல் அரசியல் என்பது உங்கள் டி.என்.ஏ.வில் இருக்கலாம். ஆனால், துணிந்து மாநில உரிமைகளுக்காக எதிர்த்து நிற்பதுதான் எங்கள் டி.என்.ஏ.வில் இருக்கிறது.இவ்வாறு தெரிவித்துள்ளார்.