கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் ஜுன் முதல் விண்ணப்பிக்க முதல்வர் அழைப்பு


சென்னை: ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள், ஜுன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்’ என, சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற தகவல் தொழில்நுட்பத் துறை, தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், கொமதேக உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு) பேசும்போது, ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1.14 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரப்படுகிறது. மீதமுள்ள குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும் என்பது, நான் உட்பட பல்வேறு உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளோம். முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

அதற்குப் பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக் கூடிய கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின்கீழ், 1.14 கோடி பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. தகுதிவாய்ந்த எல்லோருக்கும் வழங்கப்படுகிறது. இதில் விடுபட்டவர்களுக்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும் அரசின் கவனத்துக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே, இந்த அவையிலும் அது எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, இதையெல்லாம் கருத்தில்கொண்டு, ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தின்கீழ் பொது மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை உடனடியாக நிறைவேற்றும் பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்

அந்த வகையில், ஜூன் மாதம் 4-ம் கட்டமாக ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின்கீழ் கோரிக்கைகளைக் கேட்கக் கூடிய பணிகளை நாங்கள் தொடங்க இருக்கிறோம். அந்தப் பணி 9 ஆயிரம் இடங்களில் நடைபெற இருக்கிறது. அப்போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் விடுபட்டிருக்கிறதோ, அவர்கள் முறையாக விண்ணப்பித்தால் நிச்சயமாக விரைவில் அவர்களுக்கும் வழங்கப்படும்’’ என்றார்.

தொடர்ந்து ஈ.ஆர்.ஈஸ்வரன், ‘திருச்செங்கோட்டில் சிலப்பதிகார கோட்டத்தை உருவாக்க வேண்டும்’ என்று கோரியதற்கு, ‘இதுதொடர்பாக, ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். நிச்சயமாக நிறைவேற்றப்படும்’ என்று முதல்வர் பதிலளித்தார்.

x