தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை வென்று மேற்கிந்திய தீவுகள் அணி சாதனை படைத்துள்ளது.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் வருகிற ஜூன் 2ம் தேதி துவங்க உள்ளது. இதையொட்டி அனைத்து நாடுகளும் தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட டி20 போட்டிகளில் வெற்றி பெற பல்வேறு நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன.

அந்த வகையில் மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றிருந்த நிலையில், 2வது டி20 போட்டி இன்று சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் பிராண்டன் கிங் 36 ரன்களும், கைல் மேயர்ஸ் 32 ரன்களும், ரோஸ்டன் சேஸ் 67 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்து இருந்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் இங்கிடி, நாபா பீட்டர், பெலுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணியில் ஹென்ரிக்ஸ் 34 ரன்களும், குவின்டன் டீ காக் 41 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ரஸீ வான் 30 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 20 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 191ன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். ஆட்டநாயகனாக ரோஸ்டன் சேஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி, தொடரையும் வென்று அசத்தியுள்ளது. இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.