சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மே 24, 26 ஆம் தேதிகளில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க வரும் ரசிகர்களுக்கு, மாநகரப் பேருந்துகளில் இலவச பயணத்துக்கு அனுமதி இல்லை. எனவே பயணிகள், டிக்கெட் எடுத்து பயணம் செய்யுமாறு தமிழக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் பல ஆட்டங்கள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் ஆட்டங்கள், பெரும்பாலும் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகின்றன. இந்த போட்டியை காணவரும் சிஎஸ்கே ரசிகர்களை கவருவதற்காக, கிரிக்கெட் போட்டி டிக்கெட்டை காண்பித்து அரசு பேருந்தில் இலவசமாக பயணித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்தது.
போட்டி நடைபெறும் 3 மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்து 3 மணிநேரத்திற்கும் பின்பும் சேப்பாக்கத்தில் இருந்து பிற இடங்களுக்கு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். ஏ.சி பேருந்துகளில் இந்த சலுகை இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதை கிரிக்கெட் ரசிகர்கள் பயன்படுத்தி வந்தனர்.
கிரிக்கெட் போட்டி காண வரும் ரசிகர்களுக்கு, அரசு பேருந்தில் எப்படி இலவசமாக அனுமதிக்கலாம் என்று எதிர்ப்பு எழுந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்த போக்குவரத்து கழகம், சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டிகளைக் காண வருபவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அரசு செலவில் இலவசப் பேருந்து சேவை வழங்கவில்லை.
போக்குவரத்து கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள சிஎஸ்கே அணி நிர்வாகம் பயணச்செலவை போக்குவரத்துத் துறைக்கு செலுத்தி விட்டதாக தெரிவித்தது. மேலும், சென்னையில் ஐபிஎல் போட்டிகளைக் காணச் செல்லும் ரசிகர்கள், இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி வரும் 24ம் தேதி மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளை காணச் செல்லும் ரசிகர்களுக்கு, அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாமா என்று கேள்வி எழுந்தது.
இதையடுத்து, முந்தைய ஐபிஎல் போட்டிகளை போல Online/pre-printed டிக்கெட்டை காண்பித்து, மாநகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயண செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த அறிவிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, வரும் மே 24, 26 ஆம் தேதிகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதி இல்லை. எனவே பயணிகள் பயணக் கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு பெற்று பயணம் செய்யுமாறு தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வங்கக்கடலில் புயல் சின்னம்... தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொட்டப் போகிறது கனமழை!