சர்வதேச பல்கலை. கூடைப்பந்து போட்டி: இந்திய அணிக்கு தூத்துக்குடி மாணவர் தேர்வு


சர்வதேச பல்கலைக்கழக கூடைப்பந்து போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு தூத்துக்குடியை சேர்ந்த மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் போக்குவரத்துத் துறையில் மேற்பார்வையாளராகவும், துறைமுக ஆணைய குழு உறுப்பினராகவும் பணியாற்றி வரும் பால கிருஷ்ணன் மற்றும் சுமித்ரா தம்பதியின் மகன் சுகந்தன். இவர், பெங்களூரு ஜெயின் பல்கலைக் கழகத்தில் வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கூடைப் பந்து வீரரான சுகந்தன், ஜெயின் கல்லூரி சார்பில் விளையாடி தென்னிந்திய அளவில் நடந்த பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான கூடைப் பந்து போட்டியில் முதலிடமும், அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கான இடையேயான கூடைப்பந்து போட்டியில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து சர்வதேச பல்கலைக் கழக கூடைப் பந்து போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான வீரர்கள் தேர்வு கொச்சி மகாத்மா காந்தி பல்கலைக் கழக விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுகந்தன் இந்திய அணிக்காக தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

இதன் மூலம் வரும் ஜூலை 16ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஜெர்மனியில் நடைபெறும் அகில உலக பல்கலைக் கழகங்களுக்கு இடையான கூடைப்பந்து போட்டியில் இந்திய அணியின் சார்பில் சுகந்தன் பங்கேற்று விளையாடவுள்ளார். சுகந்தனின் தந்தை பால கிருஷ்ணனும் கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஆவார். இவர், தூத்துக்குடி வ.உ.சி துறைமுக அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடியுள்ளார்.

சுகந்தனுக்கு தூத்துக்குடி துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோகித் மற்றும் துறைமுக விளையாட்டு குழு நிர்வாகிகள், அதிகாரிகள், மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

x