திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலில் நாளை ராகு, கேது பெயர்ச்சி விழா!


திருவாரூர்: திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா நாளை (ஏப்.26) நடைபெற உள்ளது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் திருப்பாம்புரத்தில் சேஷபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள மூலவர் சேஷபுரீஸ்வரர், வண்டுசேர் பூங்குழலி அம்பாள் ஆகியோரை ராகுவும், கேதுவும் ஏக சரீரமாக பூஜித்து அருள் பெற்றதால், இத்தலம் ராகு, கேது தலம் என்று அழைக்கப்படுகிறது.

தென்காளஹஸ்தி என்றும் அழைக்கப்படும் இந்தக் கோயிலில் வழிபட்டால் திருக்குடந்தை, திருநாகேஸ்வரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம் மற்றும் காளஹஸ்தி ஆகிய 5 கோயில்களில் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்நிலையில், நாளை (ஏப்.26) மாலை 4.20 மணிக்கு ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் இடம்பெயர்கின்றனர். இதையொட்டி, இக்கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. விழாவில், நாளை, நாளை மறுநாள் (ஏப்.26, 27) ஆகிய 2 நாட்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடைபெற உள்ளன.

இதில் ராகு, கேது பால் அபிஷேகத்துக்கு ரூ.50, லட்சார்ச்சனைக்கு ரூ.100, ராகு, கேது தோஷ பரிகார ஹோமத்துக்கு ரூ.500, சிறப்பு ராகு, கேது தோஷ பரிகார பூஜைக்கு ரூ.500, கட்டளை அர்ச்சனைக்கு 18 மாதங்களுக்கு ரூ.1,800, பக்தர்கள் குறிப்பிடும் நாளில் ராகு, கேது அபிஷேகம் செய்ய ரூ.2,000 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ராகு, கேது பெயர்ச்சி விழாவில் பக்தர்கள் பங்கேற்று பயனடையலாம் என கோயில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

x