மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து முருகன், தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோருடன் மே 7-ம் தேதி மாலை 5 மணியளவில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு புறப்படுகின்றனர்.
இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்தியபிரியா, துணை ஆணையர் எம்.சூரியநாராயணன் ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி முதல் மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முக்கியத் திருவிழாவான திருக்கல்யாணம் மே 8ம் தேதி காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் நடைபெறும்.
இதில் பங்கேற்கும் வகையில் திருப்பரங்குன்றம் கோயிலிலிருந்து முருகன் - தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் மே 7-ம் தேதி மாலை 5 மணியளவில் புறப்படுகின்றனர். மே 8-ம் தேதி காலையில் நடைபெறும் திருக்கல்யாணத்தில் பங்கேற்கின்றனர். அன்றிரவு 7.30 மணிக்கு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறும். மே 9-ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும்.
மே 10-ம் தேதி இரவு 10.15 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குள் உள்ள 16 கால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் விடைபெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். மே 11-ம் தேதி காலை 10 மணியளவில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அலுவலக மண்டகப்படி நகைக்கடை பஜார் மண்டபத்தில் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் புறப்பாடு நிகழ்ச்சி மாலை 5 மணியளவில் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.