கோவை: மருதமலை முருகன் கோயிலில் ‘லிப்ட்’ அமைக்கும் பணி 50 நாட்களுக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மருதமலை முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அடிவாரத்தில் இருந்து மலை மீதுள்ள கோயிலுக்கு பக்தர்கள் வந்தடைய சாலை மற்றும் படிக்கட்டுப் பாதைகள் உள்ளன. மலை மீது வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து பக்தர்கள் 150 படிக்கட்டு களை கடந்து, 35 மீட்டர் உயரத்துக்கு மேலே சென்று சுவாமியை தரிசனம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் முதியோர், நடக்க சிரமப்படும் பக்தர்கள் செல்ல ஏதுவாக, ‘லிப்ட்’ (மின் தூக்கி) அமைக்க இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்தது.
அதன்படி, ரூ.5.20 கோடி மதிப்பில் ‘லிப்ட்’ அமைக்கும் பணிகள் கடந்தாண்டு தொடங்கப்பட்டன. ராஜகோபுரம் படிக்கட்டை ஒட்டியுள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில், 2 லிப்ட்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஒரே சமயத்தில் தலா 20 பேர் அதில் செல்லலாம். அங்கிருந்து 12 மீட்டர் உயரத்துக்கு ‘லிப்ட்’ செல்லும். அங்கிருந்து 40 மீட்டர் தூரம் பக்கவாட்டுப் பகுதியில் பக்தர்கள் நடந்து வந்து, மற்றொரு லிப்ட்டில் ஏறி 8 மீட்டர் தூரம் மேலே சென்று கோயிலுக்கு செல்லலாம்.
மருதமலை கோயில் கும்பாபிஷேகத்தின் போதே, ‘லிப்ட்’ பணிகளையும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால், பாறைகளை தோண்டுவதில் இடையூறு உள்ளிட்ட காரணங்களால் தாமதமானது. இச்சூழலில், தற்போது ‘லிப்ட்’ அமைக்கும் பணியை அறநிலையத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து கோயில் துணை ஆணையர் செந்தில்குமார் கூறும்போது, ”முதல் லிப்ட் அமைக்கும் பணி 90 சதவீதம் முடிந்து விட்டது. இரண்டாம் கட்ட ‘லிப்ட்’ திட்டத்தில் 40 சதவீதம் பணிகள் முடிந்து விட்டன. கட்டுமானப் பணிகள், தொழில் நுட்ப பணிகள் நிலுவையில் உள்ளன. அடுத்த 50 நாட்களுக் குள் இப்பணிகளை முடித்து, லிப்ட்-டை பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.