வைத்தியநாத சுவாமி கோயிலில் நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாடு!


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் புகழ்பெற்ற தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள தையல் நாயகி அம்மனை நகரத்தார் எனப்படும் செட்டிநாட்டுப் பகுதி மக்கள் தங்களது குலதெய்வமாக கொண்டுள்ளனர்.

ஆண்டு தோறும் சித்திரை மாதம் 2-வது செவ்வாய்க் கிழமையன்று அவர்களுக்காக கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதில் கலந்து கொள்வதற்காக நகரத்தார் மக்கள் தங்கள் பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள், கூண்டு வண்டிகள் மூலமும், நடை பயணமாகவும் வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சித்திரை மாத முதல் செவ்வாய்க்கிழமையன்றே பாதயாத்திரையை தொடங்கி விடுகின்றனர். 100 கி.மீ. மேல் ஒரு வார காலத்துக்கு நடந்தே வந்து சேரும் இந்த மக்கள் முதல் நாள் இரவில் கோயிலில் தங்கி, மறுநாள் சித்திரை 2-வது செவ்வாய் அன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொள்வது வழக்கம். பல தலைமுறைகளாக இந்த வழிபாடு தொடர்ந்து நடைபெறுகிறது.

குலதெய்வ வழிபாடாகவும், அதேநேரம் தையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படியும் மக்கள் சீர்வரிசை பொருட்களை கூண்டு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு நடைபயணமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். நிகழாண்டு பாதயாத்திரையாக பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர்.

நேற்று கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர். தங்கள் வேண்டுதலுக்காகவும், வழி நடைக்கு துணையாகவும் கொண்டு வந்த மஞ்சள் தடவிய கம்புகளை வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக கோயில் கொடி மரத்தில் செலுத்தினர். புதிய வேண்டுதல் நிறைவேற வேண்டி அங்கிருந்து ஒரு குச்சியை தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். இதையொட்டி, சீர்காழி டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

x