ராமேசுவரம்: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்தெழும் தினமான ஈஸ்டர் பண்டிகையை நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் கொண்டாடினர்.
இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாள் தவக்காலமாக அனுசரிக்கின்றனர். இந்த ஆண்டு தவக்காலம் கடந்த மார்ச் 5-ம் தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் துவங்கியது. இந்த தவக்காலத்தில் தவக்கால நடைபயணம், தியானம், திருப்பயணம், சிலுவை பயணம், குருத்தோலை ஞாயிறு, பாதம் கழுவுதல், புனித வெள்ளி உள்ளிட்டவைகளை நடைபெற்றன.
இந்நிலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் கொண்டாடினர். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் புனித ஜெப மாலை அன்னை ஆலயத்தில் சனிக்கிழமை நள்ளிரவு மின்விளக்குகள் அணைக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி இயேசுவின் உயிர்தெழுதலை வரவேற்றனர். திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
மேலும் ராமேசுவரம் சம்பை தூய செபஸ்தியார் ஆலயம், தங்கச்சிமடம் புனித தெரசாள் ஆலயம், பாம்பன் வேளாங்கன்னி ஆலயம், மண்டபம் அருளானந்தர் ஆலயம், தங்கச்சிமடம் சவேரியார், அன்னை தெரசாள், குழந்தை ஏசு ஆலயங்கள், கீழக்கரை பரிசுத்த பேதுரு ஆலயம், முத்துப்பேட்டை புனித காணிக்கை அன்னை ஆலயம், பரமக்குடி அலங்கார மாதா ஆலயம், காரங்காடில் தூய செங்கோல் அன்னை ஆலயம், தொண்டியில் தூய சிந்தாத்திரை அன்னை ஆலயங்களில் திருப்பலியும் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளில் திரளான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு இயேசு உயிர்த்தெழுந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர்.