திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் கோயில், 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் பார்த்த சாரதி பெருமாள் பிரம்மோற்சவம் சித்திரை மாதமும், நரசிம்மர் பிரம்மோற்சவம் ஆனி மாதமும் நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டு பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து, புன்னை வாகனம், சேஷ வாகனம், சிம்ம வாகனம் ஆகியவற்றில் பெருமாள் வீதி உலா வந்து அருள்பாலித்தார். கருட சேவை கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஹம்ச வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, பல்லக்கு சேவை, அனுமந்த வாகனம், ஆனந்த விமானம், யானை வாகனம் ஆகியவற்றில் பெருமாள் வீதிஉலா நடைபெற்றது.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, நள்ளிரவு 12 மணி முதலே பக்தர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினர். நேரம் ஆக ஆக, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் பார்த்தசாரதி பெருமாள் சர்வ அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார்.
காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். பக்தர்கள், ‘கோவிந்தா, கோவிந்தா’ என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனர். மாட வீதிகளில் வலம் வந்த தேர், நிலையை வந்தடைந்தது. இரவு 9 மணிக்கு தோட்ட திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று காலை 6.30 மணிக்கு வெண்ணெய் தாழி உற்சவமும், இரவு குதிரை வாகன சேவையும் நடைபெற உள்ளது. நாளை காலை 11 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், இரவு கண்ணாடி பல்லக்கு சேவை நடைபெற உள்ளது. 22-ம் தேதி சப்தாவர்ணம் எனும் சிறிய திருத்தேர் நிகழ்வுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.