கோவை: கோவை மருதமலை கோயிலில் அரசு விடுமுறை நாட்கள், கிருத்திகை, சஷ்டி ஆகிய விசேஷ தினங்களில் மலை கோயிலில் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 'மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளின்படி பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கோயிலில் போதிய அளவு வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மருதமலை கோயிலில் இனி வரும் காலங்களில் செவ்வாய், ஞாயிறு, கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய விசேஷ தினங்களில் நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. மேற்கண்ட நாட்களில் பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும், கோயில் பேருந்து மற்றும் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பேருந்துகள் மூலம் சுவாமி தரிசனம் செய்யலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.