ஆங்கில புத்தாண்டை பிறந்துள்ளதையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி குடும்பம், குடும்பமாக சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தனர். அதிகாலை 4.30 மணி முதலே பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருகின்றனர். 2024-ம் ஆண்டு தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான, வளமான ஆண்டாக அமைய வேண்டும் என ஒவ்வொருவரும் மீனாட்சியம்மனை தரிசித்தனர்.

ஆங்கில புத்தாண்டு மற்றும் விடுமுறை நாளான இன்று மதுரை மட்டுமல்லாது தென்மாவட்ட மக்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ளனர். மேலும் ஐயப்ப பக்தர்களும், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் சாமி தரிசனம் செய்வதற்காக வரிசை வரிசையாக காத்திருந்து உள்ளே சென்றனர். கோயிலில் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் காவல்துறையினர் அதிகளவில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் புத்தாண்டு தினத்தில் மீனாட்சியம்மனுக்கு பட்டுச்சேலை சாத்தி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகிறனர். புத்தாண்டை முன்னிட்டு பூ அலங்காரத்தில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர், விநாயகர் அம்மன் திரு உருவம் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் அதனை பக்தி பரவசத்துடன் வணங்கி செல்கின்றனர்.
நோய் நொடியற்ற வாழ்வையும், அளவற்ற மகிழ்வையும், வளமான ஆண்டாக 2024 அமைய வேண்டும் என மீனாட்சியம்மனை பக்தர்கள் மனமுருக வழிபட்டு வருகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக மாசி வீதிகள் மற்றும் ஆடி வீதிகளில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மோப்பநாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் மூலம், போலீஸார் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.