சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா இன்று நடைபெறுகிறது. இதனால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்நிலையில், இன்று (டிச.27) விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு நடராஜருக்கு மகாபிஷேகமும், 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரமும், பஞ்ச மூர்த்தி வீதி உலாவும் நடைபெறுகிறது. பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்து சித்சபா பரவேசம் செய்கின்றனர்.
பின்னர் 28-ந்தேதி முத்துப்பல்லக்கு வீதி உலா காட்சியுடன் விழா முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், ஆருத்ரா தரிசன விழாவையொட்டி கடலூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.