பள்ளிக்கட்டு சபரிமலைக்கு... ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல பூஜை!


சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கேரளாவில் உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

சபரிமலையில் இந்த ஆண்டின் மண்டல பூஜை இன்று (டிச.27) நடக்கிறது. அப்போது திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிப்பது வழக்கம். அதன்படி நேற்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டது

இதையடுத்து சபரிமலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து காலை 10.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலான முகூர்த்த வேளையில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

பின்னர் பிற்பகல் 1 மணிக்கு வழக்கம்போல் நடை அடைக்கப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். தொடர்ந்து வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுக்குப் பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டு 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை நிறைவு பெறுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

அதிகாலையில் ரவுடிகள் 2 பேர் சுட்டுக்கொலை... காஞ்சிபுரம் அருகே பரபரப்பு!

x