வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை வளாகத்தில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படுவதற்கு தொடரும் எதிர்ப்புகள் காரணமாக கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட மாநில அரசால் திட்டமிடப்பட்டு ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கியுள்ளது. இதற்கு வள்ளலார் பக்தர்கள். மற்றும் பார்வதிபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வடலூர் வள்ளலார் பெருவெளியில் சர்வதேச மையம் என்ற போர்வையில் கட்டிடம் கட்டி பெருவெளி முழுவதும் கட்டிட குவியலாக்க அரசு முயற்சிப்பதற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. கட்டிடப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி பார்வதிபுரம் மக்கள் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து இன்று சன்மார்க்க அன்பர்கள் ஏராளமானவர்கள் பார்வதிபுரம் கிராம மக்களுடன் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.
அதனை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் வடலூர் நான்குமுனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து அவர்கள் அனைவரையும் கைது செய்த வடலூர் போலீஸார் அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். அனைவருக்கும் காவல்துறை சார்பில் மதிய உணவும் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் சீமான், பெ.மணியரசன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வள்ளலார் சத்திய ஞான சபை வளாகத்தில் சர்வதேச மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்படி சன்மார்க்க அன்பர்கள் மற்றும் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக வள்ளலார் சர்வதேச மையம் கட்டிடப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...