இன்று குருத்தோலை ஞாயிறு... வேளாங்கண்ணி, பனிமய மாதா ஆலயங்களில் குவிந்த கிறிஸ்தவ மக்கள்!


தூத்துக்குடி பனிமய மாதா தேவாலயம்

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கொண்டாடுப்படுவதையொட்டி, பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ மக்கள் ஊர்வலமாக சென்று, தேவாலயங்களில் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

இயேசு பிரான் சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய ஞாயிறு தனது பாடுகளை மக்களுக்கு உணர்த்த கழுதை மேல் அமர்ந்து ராஜா போன்று ஜெருசலேம் நகர் நோக்கி சென்றதாக நம்பப்படுகிறது. குருத்தோலையை ஏந்தியபடி ஓசன்னா பாடலை பாடியபடி அவர் பவனியாக சென்றதை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர். இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலை ஞாயிறு என்று குருத் தோலையை ஏந்தி பவனியாக சென்று பின்னர் சிறப்பு திருப்பலியில் பங்கேற்கின்றனர்.

குருத்தோலை பவனி

இதையொட்டி உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் இன்று அதிகாலை முதலே பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயம் மற்றும் திரு இருதய ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஜெபம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோயில்

கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி சாம்பல் புதனுடன் 40 நாட்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் துவங்கினர். ஈஸ்டர் பண்டிகையுடன் இந்த தவக்காலம் நிறைவடைகிறது. இதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு இன்று கொண்டாடப்பட்டது.

பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பதியில் பங்கு தந்தைகள் மற்றும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற குருத்தோலை பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஓசன்னா கீர்த்தனைகளை பாடியவாறு பேரணியாக சென்றனர்.

x