பொன்னர் சங்கர் கோயில் திருவிழா... ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!


பொன்னர் - சங்கர் கோயில் திருவிழா

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொன்னர் - சங்கர் கோயில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான தங்கைக்கு, அண்ணன் கிளி பிடித்துக் கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றது.

பொன்னர் - சங்கர் கோயில் திருவிழா

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வளநாட்டில் அண்ணன்மார் தெய்வங்கள் என்று அழைக்கப்படும் பொன்னர் - சங்கர் கோயில்கள் அமைந்துள்ளன. கொங்கு நாட்டு மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வரும், இக்கோயில்களில் பொன்னர் - சங்கர், கன்னிமாரம்மன், மந்திரம் காத்த மகாமுனி, மாசி கருப்பண்ணசாமி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்கள் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயில்களில் மாசிப் பெருந்திருவிழா நடைபெறும். புகழ் பெற்ற இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். இதேபோல் இந்த ஆண்டும் திருவிழா கடந்த 9-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

தங்கைக்கு அண்ணன் கிளி பிடித்துகொடுக்கும் நிகழ்வு

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தங்கைக்கு அண்ணன் கிளி பிடித்துகொடுக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. அதன்படி, பொன்னர் – சங்கரின் தங்கையான தங்காள், தாம் விளையாட கிளி வேண்டும் என அண்ணன்களிடம் கேட்டதால், தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பொன்னர் – சங்கர் கோயில் அருகே உள்ள மரத்தின் மீதேறி, தங்காளுக்கு கிளி பிடித்துக்கொடுக்கும் வரலாற்றை நினைவு படுத்தும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது.

இதில் அண்ணன்மார் என்றழைக்கப்படும் சங்கர் வேடமிட்டவர் மரத்தின் மீதேறி தங்காளாக வரும் சிறுமிக்கு கிளியை பிடித்துக் கொடுத்தார். இந்த ஐதீக நிகழ்வை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமிகளை வழிபட்டனர். விழாவில் கோவை, திருப்பூர், ஈரோடு, தருமபுரி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த திருவிழாவின் தொடர்ச்சியாக இன்று நள்ளிரவு படுகளத்தில் உள்ள பொன்னர் – சங்கர் கோயிலில் அண்ணன்மார் படுகளம் சாய்தல், பின் எழுப்புதல் எனும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நாளை வீரப்பூரில் வேடபரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

x