திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம்... பக்தர்கள் வசதிக்காக 1,084 சிறப்பு பேருந்துகள்!


அரசு பேருந்துகள்

பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 1,084 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை கிரிவலம்

மாசி மாதப் பெளா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வருவதற்கு உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 23-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4:22 மணிக்குத் தொடங்கி சனிக்கிழமை (பிப்ரவரி 24) மாலை 6.18 மணி வரை பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலத்தில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திரளுவார்கள். இதற்காக நாளை மற்றும் நாளை மறுநாள் 1,084 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கிரிவலம் சிறப்பு பேருந்துகள்

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் பவுர்ணமி கிரிவலத்தில் அதிகளவில் பக்தா்கள் கூடுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக பக்தா்கள் வசதிக்காக, பிப்ரவரி 23-ம் தேதி(நாளை ) 682 சிறப்பு பேருந்துகளும், 24-ம் தேதி (நாளை மறுநாள்) 502 சிறப்புப் பேருந்துகளும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தால் இயக்கப்பட உள்ளன.

பிப்ரவரி 23-ம் தேதி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 275 சிறப்பு பேருந்துகளும், காஞ்சிபுரத்திலிருந்து 40, புதுச்சேரியிலிருந்து 30, பெங்களூரிலிருந்து 20, வேலூரிலிருந்து 55, திருச்சியிலிருந்து 50, சேலத்திலிருந்து 50, ஓசூரிலிருந்து 50, கிருஷ்ணகிரியிலிருந்து 20, தருமபுரியிலிருந்து 30, மற்ற வழித்தடங்களிலிருந்து 62 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 682 பேருந்துகள் இயக்கப்படும்.

பிப்ரவரி 24-ம் தேதி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 125, காஞ்சிபுரத்திலிருந்து 20, புதுச்சேரியிலிருந்து 20, பெங்களூரிலிருந்து 20, வேலூரிலிருந்து 55, திருச்சியிலிருந்து 50, சேலத்திலிருந்து 50, ஓசூரிலிருந்து 50, கிருஷ்ணகிரியிலிருந்து 20, தருமபுரியிலிருந்து 30, மற்ற வழித்தடங்களிலிருந்து 62 என மொத்தம் 502 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும்.

அத்துடன் பயணிகள் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கவும், பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்கவும் தேவையான அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x