உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் அயோத்தி விழாக்கோலம் பூண்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ம்ஆண்டில் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இக்கோயில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.
பாரம்பரிய நாகரா பாணியில் கிழக்கு மேற்கில் 380 அடி நீளத்திற்கும், 250 அடி அகலத்திற்கும் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 161 அடி உயரம் கொண்ட இக்கோயிலில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்கள் உள்ளன. கோயிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டதாக உள்ளது.
இங்கு பாலபருவ ராமரின் திருவுருவச் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.இதற்கான பூஜைகள் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இந்த பூஜைகளில் 121 ஆச்சார்யர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அயோத்தி ராமர் கோயில் கருவறைக்குள் வைப்பதற்காக கர்நாடகா மாநிலம், மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்த 200 கிலோ எடையிலான பால ராமர் சிலை அயோத்திக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 18-ம் தேதி அந்த சிலை கோயில் கருவறையில் வைக்கப்பட்டுள்ளது.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை இன்று மதியம் 12.20 மணிக்கு நடைபெற உள்ளது. ராமர் திரேத யுகத்தில் அபிஜித் முகூர்த்தத்தில் பிறந்தவர் என்பதால் அந்த முகூர்த்தத்தில் சிலை பிரதிஷ்டை நடைபெற உள்ளதாக என்று ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.
கும்பாபிஷேகத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.55 மணிக்கு அயோத்தியில் உள் ராமஜென்ம பூமிக்கு வருகிறார். பகல் 12.05 முதல் 12.55 மணி வரை விழாவில் பங்ற்கிறார். இதன் பின்னர் குபேர் தில சிவன் கோயிலில் ராமர் சிலையை அவர் வழிபடுகிறார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண விளக்குகளாலும், மலர் மாலைகளாலும் அயோத்தி நகரமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.