தை மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஜனவரி 23 முதல் 4 நாட்களுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும். இக்கோயிலுக்கு மதுரை, மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும் பாதைகள் உள்ளன. இது தவிர தேனி மாவட்டத்தில் இருந்து ஒரு பாதை உள்ளது. இதில் பெரும்பாலும், வத்திராயிருப்பு அருகே உள்ள பாதையையே பக்தர்கள் அதிகளவு பயன்படுத்துகின்றனர்.

இங்கே உள்ள மலைக்கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆகிய இரண்டு சுயம்பு லிங்கங்கள் உள்ளன. மூலிகைகள் நிறைந்த மலைக்குன்று ஒன்றும் உள்ளது. அதற்கு சஞ்சீவி மலை என்று பெயர். மேலும் சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்களுக்கும் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மொத்தம் 8 நாட்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
அதன்படி, தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வரும் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை 4 நாட்கள் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு செல்லும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களையோ, பிளாஸ்டிக் பொருட்களையோ கொண்டு செல்லக்கூடாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
மசூதியை இடித்து கோயில் கட்டியதில் உடன்பாடில்லை... அடுத்த சர்ச்சை கிளப்பிய உதயநிதி!