ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இவ்விழாவில் பங்கேற்க முன்னாள் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் என 8000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ராமர் கோயில் விழாவில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளப் போவதில்லை என்று அக்கட்சி நேற்று அறிவித்து விட்டது.

"மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் அயோத்தி கோயில் விழாவை அரசியலாக்க முயற்சிக்கின்றனர். அந்த அற்புதமான கோயிலின் விழா பாஜக- ஆர்எஸ்எஸ் நிகழ்வாகியுள்ளது. அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா, தேர்தல் நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது என்பதால் அவர்களின் அழைப்பை மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் நிராகரித்துள்ளனர்" என்று காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், "ராமர் கோயில் நிகழ்ச்சி அழைப்பை காங்கிரஸ் நிராகரித்துள்ளது. கடவுள் ராமரை கற்பனை உருவம் என இதே காங்கிரஸ் கட்சிதான் கூறியது. தற்போது ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியைப் புறக்கணித்துள்ளது. ராமர் கோயில் நிகழ்ச்சியைப் புறக்கணித்தவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.