அக்னி நட்சத்திர விழா நிறைவு: பழநி மலையைச் சுற்றி வந்து வழிபட்ட பக்தர்கள்


பழநி: அக்னி நட்சத்திர விழா இன்றுடன் (மே 21) நிறைவடைவதையொட்டி அதிகாலை முதலே திரளான பக்தர்கள் பழநி மலையைச் சுற்றி கிரிவலம் வந்து வழிபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கடைசி 7 நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்களும் அக்னி நட்சத்திர விழா நடைபெறும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திர விழா மே 8ம் தேதி தொடங்கியது. ‘சித்திரை கழுவு’ என்று அழைக்கப்படும் இந்த விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் 14 நாட்களுக்கு பழநி மலையைச் சுற்றி கிரிவலம் வந்து வழிபடுவது வழக்கம்.

இந்த நாட்களில் காலை மற்றும் மாலையில் பழநி மலையைச் சுற்றி கிரிவலம் வரும் போது, அங்கு வீசும் மூலிகை காற்றால் நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. இந்நிலையில், அக்னி நட்சத்திர விழா இன்றுடன் (மே 21) நிறைவடைகிறது.

எனவே, அதிகாலை முதல் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் கால்களில் காலணி அணியாமல், பெண்கள் முருகனுக்கு உகந்த கடம்ப மலர்களைத் தலையில் சூடியும், ஆண்கள் கைகளில் ஏந்தியபடி கிரிவலம் வந்து வழிபட்டனர். சில பக்தர்கள் தீர்த்த காவடி, பால் காவடி, பன்னீர் காவடியுடன் கிரிவலம் வந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், காலை 4.30 மணிக்கு விளா பூஜை நடைபெற்றது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை கள் நடந்தன. தரிசனத்துக்காக அதிகாலை முதலே பக்தர்கள் மலைக்கோயிலில் குவியத் தொடங்கினர். கூட்டம் அதிகளவில் இருந்ததால் பக்தர்கள் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

x