மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 3-ம் நாளான நேற்று மாலை வைகை ஆற்றில் இறங்கி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க சுந்தரராஜப் பெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்குப் புறப்பட்டார். மதுரை மாநகர் எல்லையான மூன்றுமாவடியில் இன்று (மே 11) அதிகாலை எதிர்சேவை துவங்குகிறது. பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளியபடி நாளை காலையில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.
அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 8-ம் தேதி தொடங்கியது. வரும் 17-ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. முதல் நாள், இரண்டாம் நாள் மாலையில் சுந்தரராஜப் பெருமாள் தோளுக்கினியானில் எழுந்தருளினார். மூன்றாம் நாளான நேற்று சுந்தரராஜப் பெருமாள், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் கோயிலிலிருந்து மாலை 5.20 மணியளவில் மதுரைக்குப் புறப்பட்டார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் திரண்டு, கள்ளழகரை தரிசித்தனர்.
பின்னர் கோயில் ராஜகோபுர வாயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி சந்நிதியில் தீபாராதனை முடிந்து, கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று, சுவாமி புறப்பாடானார். இரவில் பொய்கைக்கரைப்பட்டி கள்ளந்திரி பகுதியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி, அப்பன்திருப்பதி ஜமீன்தார் மண்டபத்தில் தங்கினார். 4-ம் நாளான இன்று (மே 11) அதிகாலை 1 மணியளவில் சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் எழுந்தருளி, கடச்சனேந்தல் வழியாக மதுரை மாநகர் எல்லையான மூன்றுமாவடியில் அதிகாலை 5.30 மணியளவில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு அழைப்பர்.
தொடர்ந்து, புதூர், ரிசர்வ் லைன், அவுட் போஸ்ட் மற்றும் அம்பலகாரர் மண்டகப்படிகளில் எழுந்தருளி, இரவு 8 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் வந்தடைகிறார். அங்கு திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொள்கிறார்.
நாளை (மே 12) அதிகாலை கோயிலிலிருந்து புறப்பாடாகி தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருள்கிறார். அங்கிருந்து வைகை ஆறு நோக்கி தங்கக் குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். வழிநெடுகிலும் திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்களின் வரவேற்புடன், எழுத்தாணிக்காரத்தெரு வீரராகவ பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் வரவேற்க, சித்திரை பவுர்ணமியன்று அதிகாலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.
வைகை ஆற்றில் திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருளாசி தந்துவிட்டு, காலை 7.25 மணியளவில் வீரராகவப் பெருமாளுக்கு மாலை சாற்றிவிட்டு, அங்கிருந்து ராமராயர் மண்டகப்படிக்கு புறப்படுகிறார். அங்கு பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கள்ளழகரை குளிர்விப்பார்கள். அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்குகிறார்.
வரும் 13-ம் தேதி தேனூர் மண்டகப்படியில் எழுந்தருளியபின் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நடைபெறும். வரும் 14-ம் தேதி ராமராயர் மண்டகப்படியிலிருந்து அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்தில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்துக்கு புறப்படுகிறார். 15-ம் தேதி அதிகாலையில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் கருப்பணசாமி கோயிலில் சந்நிதியில் வையாளியாகி மலைக்கு திரும்புகிறார். வரும் 16-ம் தேதி கோயிலை அடைகிறார்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், கோயில் துணை ஆணையர் ந.யக்ஞ நாராயணன் மற்றும் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்