மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 11-ம் நாளான இன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. பக்தர்கள் பஞ்ச வாத்தியங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்.29 முதல் மே 10-ம் தேதி வரை 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. தினமும் காலை, மாலைகளில் சுவாமி, அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய விழாவான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் மே 6-ம் தேதியும், திக்குவிஜயம் மே 7-ம் தேதியும் நடைபெற்றது. ஒன்பதாம் நாளான நேற்று (மே 8) மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து இன்று தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் சுவாமியும், அம்மனும் நான்கு மாசி வீதிகளில் எழுந்தருளினர். பின்னர் கோயிலில் மண்டகப்படிகளிலிருந்து புறப்பட்டு கீழமாசி வீதியிலுள்ள தேரடிக்கு 5.30 மணிக்கு புறப்பட்டனர். அங்கு தீபாராதனை நடந்தது. அங்குள்ள தேரடி கருப்பண சாமியிடம் தீபாராதனை முடிந்து உத்தரவு பெற்று பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் எழுந்தருளினர்.
காலை 6.20 மணியளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க முதலில் சுவாமி தேர் புறப்பட்டது. அதைத் தொடர்ந்து 6.35 மணியளவில் மீனாட்சி அம்மன் தேர்புறப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர் கள் வடம் பிடித்து இழுக்க தேர் நிலையிலிருந்து புறப்பாடானது. பக்தர்கள் ஹரஹர சங்கர மகா தேவா, மீனாட்சி சுந்தர மகாதேவா' என்ற கோஷங்களை முழங்கினர். நான்கு மாசி வீதிகளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
வெயில் தாக்கம் அதிகம் இருந்ததால் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் அன்னதானம் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. தேர் நிலைகளை அடைய மதியம் ஒரு மணிஒரு மணிக்கு நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7 மணியளவில் சப்தாவர்ண சப்பரத்தில் பிரியாவிடை கந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் நான்கு மாசி வீதிகளில் எழுந்தருள்கின்றனர். 12-ம் நாளான நாளையுடன் (மே 10) தீர்த்தம் பூஜையுடன் நடைபெறும்.