மதுரை திருக்கல்யாண விழாவில் பாரபட்சம் காட்டிய அதிகாரிகள், போலீஸார்!


படம்:நா.தங்கரத்தினம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் திருக்கல்யாண நிகழ்வை முன்னிட்டு கோயிலைச் சுற்றியுள்ள தெருக்கள், வீதிகள் என நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த விழாவில் பங்கேற்க வந்த விஐபிகள் குடும்பத்தினருக்கு எந்த தடையும் இல்லாமல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் டிக்கெட் எடுத்து வந்த பக்தர்களிடம் அதிகாரிகளும், போலீஸாரும் கெடுபிடி காட்டினர்.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் கோயில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி நான்கு மாசி வீதிகளிலுள்ள மண்டகப் படிகளில் எழுந்தருளினர். திருக்கல்யாண மேடை 10 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அப்போது திருக்கல்யாண மேடைக்கு அருகில் உள்ள மேடையில் அதிகாலை 5 மணியளவில் சைவ சித்தாந்தத்தின் 12 திருமுறைகள் குறித்து திருமுறைகளில் கண்ணப்பர் என்ற தலைப்பில் ஓதுவார் குழுவினர் பாடல்கள் பாடினர்.

அதேபோல் கண் கொடுத்த கண்ணப்பர் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க் கரசி சொற்பொழிவாற்றினார். காலை 6.45 மணி முதல் 8.10 வரை மீனாட்சி அம்மன் கோயில் சிறப்புகள் பற்றி விரிவாக பேசினார். முன்னதாக 7 வயது சிறுமி தியா ஆன்மிக பாடல்கள் பாடி பக்தர்களை கவர்ந்தார்.

திருக்கல்யாணத்தில் பங்கேற்கும் வகையில் நீதிபதிகள், இந்திய ஆட்சிப் பணியாளர்கள், காவல் துறையினர், இந்து சமய அறநிலையத் துறையினர், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் என திருக்கல்யாண மேடை முன்பு 6 பிரிவுகளாக கேலரி அமைத்து விஐபிக்களுக்கு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நீதிபதிகள் வருவதற்கு முன்பு அவர்களுக்கு பதிலாக மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் இடங்களை பிடித்து அமர்ந்திருந்தனர். நீதிபதிகள் வருகைக்குப் பின்னர் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உட்கார இடம் கொடுத்தனர். அதேபோல், காவல் துறையினர், இந்து சமய அறநிலையத் துறையினர் முக்கிய விஐபிகளுக்காக அவர்களது சிப்பந்திகள் இடம் பிடித்து அமர்ந்திருந்தனர்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அவரது தாயாரும், அறங்காவலர் குழுத் தலைவருமான ருக்மணி பழனிவேல்ராஜன் ஆகியோர் காலை 7.17 மணிக்கு திருக்கல்யாண மேடைக்கு அருகிலுள்ள மேடையில் தனி இருக்கையில் அமர்ந்தனர். அமைச்சர் பி.மூர்த்தி, அவரது மனைவியுடன் காலை 7.22 மணிக்கு வந்தார். அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரவேற்றார்.

இவ்விழாவில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஸ்ரீதர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சித்ரா, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, எம்எல்ஏக்கள் ராஜன் செல்லப்பா, பூமி நாதன், காந்தி ராஜன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் செல்லத் துரை, அம்மன் கோயில் அறங்காவலர்கள் பிகேஎம்.செல்லையா, மு.சீனிவாசன், சுப்பு லெட்சுமி, எஸ்.மீனா, திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் சண்முக சுந்தரம், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் அவர்கள் குடும்பத்தோடு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேடையின் முன்பு நீதிபதிகள், அரசியல் பிரமுகர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர்கள், என 6 வரிசைகளில் அமரவைக்கப்பட்டனர். இதில் இலவச தரிசன டிக்கெட்டில் மிகக் குறைந்தவர்களே அனுமதிக்கப்பட்டனர். அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், உயர் அதிகாரிகளுடைய குடும்பத்தினரை பாதுகாப்பாக அனுப்பிய போலீஸார், பக்தர்களிடம் மட்டும் அதிக கெடுபிடிகள் காட்டியதாக வருத்தத்துடன் தெரிவித்தனர். ஆன்லைனில் டிக்கெட் பெற்றிருந்த பக்தர்கள் கூட கோயிலுக்குள் உள்ளே நுழைய முடியவில்லை.

போலீஸார் தெருக்கள் தோறும் இரும்புத் தடுப்புகள் அமைத்து சித்திரை வீதிகளில் கூட கோயிலுக்கு வெளியே உள்ள இடங்களில் கூட பக்தர்கள் செல்வதற்கு போலீஸார் அனுமதிக்காததால் பக்தர்களுக்கும், அவர்களுக்கும் பல்வேறு இடங்களில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால், திருக்கல்யாணம் அன்று கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள், இந்து அறநிலையத்துறை, போலீஸாரின் இந்த கெடுபிடியால் மனக்குமுறலுடன் வீடுகளுக்கு திரும்பினர்.

அறங்காவலர் குழு உறுப்பினர் சீனிவாசன் ஆண்டுதோறும் 4 ஆண்டுகளாக சைவ சித்தாந்தத்தின் 12 திருமுறைகள் பற்றிய புத்தகம் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். அதன்படி தற்போது ‘கண் கொடுத்த கண்ணப்பர்’ என்ற தலைப்பில் 4 ஆயிரம் பேருக்கு புத்தகம் வழங்கினார். மேலும் 10 ஆண்டுகளாக சொற்பொழிவுகளையும் நடத்தி வருகிறார். மீனாட்சி அம்மன் கோயிலைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற மேலூர் அரசுக் கல்லூரி பேராசிரியர் அம்பை மணிவண்ணன் கோயில் சிறப்புகள் பற்றி பேசினார்.

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியல் பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் நேற்று முன்தினம் மாப்பிள்ளை அழைப்பு விருந்தும், நேற்று திருக்கல்யாண விருந்து மாலை வரை நடைபெற்றது. கடைகள், வணிக நிறுவனங்களில் வாழை இலை, மாவிலை தோரணம் கட்டி வாடிக்கையாளர்களை வரவேற்றனர்.

பல்வேறு கடைகள் சார்பில் அன்னதானம், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. திருக்கல்யாணத்தை முன்னிட்டு மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தலைமையில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விஐபிக்கள், முக்கிய பிரமுகர்களை வரவேற்பதிலும், பாதுகாப்பு அளிப்பதிலும் போலீஸார் அதீத அக்கறை காட்டினர்.

கட்டணச்சீட்டில் வெளிப்படைத் தன்மையில்லை: திருக்கல்யாணத்தில் பங்கேற்கும் வகையில் ரூ.200, ரூ.500 கட்டணச்சீட்டுகள் ஆன்லைன் முறையில் பதிவு செய்ய கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதேபோல் இலவச தரிசனத்துக்கு முதலில் வருவோருக்கே அனுமதி என்ற முறையில் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

ஆனால் இம்முறை கட்டணச் சீட்டு விவரங்கள், எண்ணிக்கை, இலவச தரிசனம் என எந்தவித தகவலும் கோயில் நிர்வாகம் சார்பில் வெளிப் படையாக தெரிவிக்கப்படவில்லை. இதனால் பல்லாயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்தும் அவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் பக்தர்கள் திருக்கல்யாணத்தை நேரடியாக பார்க்க முடியாமல் தவித்தனர். இது தொடர்பாக கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணனிடம் தொடர்புகொண்டும் பதிலளிக்கவில்லை.

x