திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு நாள், நேரம் குறிப்பு!


திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்துக்கான நாள் மற்றும் நேரம் குறித்து, கோயில் விதாயகர்த்தா சிவசாமி சாஸ்திரிகள் கூறியதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு, நாள், முகூர்த்தம் பார்த்து வருகிறேன். இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நாள் குறிக்குமாறு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோயில் இணை ஆணையர் கேட்டுக் கொண்டதன் பேரில், விசுவாவசு வருடம் ஆனி மாதம் 23ம் தேதி (ஜூலை 7) காலை 6 முதல் 7 மணி வரை மற்றும் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை என இரண்டு முகூர்த்த நேரங்கள் குறித்துக் கொடுத்தேன். அப்போது, இவ்வருடத்துக்கான வாக்கிய பஞ்சாங்கம் வெளிவரவில்லை. தற்போது வாக்கிய பஞ்சாங்கம் வெளியாகியுள்ளது.

அதன்படி பார்க்கும் போது, மேற்குறிப்பிட்ட நேரங்களை விட அபிஜித் முகூர்த்தம் சரியாக இருக்கும் என்பதால், இது குறித்து, ஸ்தலத்தார் சபை மற்றும் கைங்கர்ய சபை நிர்வாகிகளுடன் கலந்து பேசி, ஜூலை 7-ம் தேதி பகல் 12.05 மணி முதல் 12.47 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்துவது சிறப்பாக இருக்கும் என, முதல்வர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், செயலாளர், ஆணையர், கோயில் தக்கார், இணை ஆணையர் ஆகியோருக்கு மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். திரிசுதந்திர ஸ்தலத்தார் சபை தலைவர் வீரபாகுமூர்த்தி அய்யர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

x