திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.100 கட்டண வரிசையில் பக்தர்கள் கடும் வெயிலில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சாதாரண நாட்களிலேயே குறைந்தது 10,000 பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு, பவுர்ணமி, சஷ்டி திதி ஆகிய நாட்களில் தரிசனத்துக்கு குறைந்தது 5 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
கோயில் வளாகத்தில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வரும் சூழலில் பக்தர்களின் தரிசன வரிசைகள் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் வரை ரூ.100 கட்டண தரிசனத்துக்கு, கோயில் முன்புள்ள வாசல் வழியாக செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, முன் வாசல் பகுதியில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், கோயிலின் பின்வாசலான வள்ளிகுகை பகுதி வழியாக பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசன வரிசைகளில் பக்தர்கள் சென்று வருகின்றனர்.
இதில், பொது தரிசனத்துக்கு மேல் தளத்தில் தனியாக வழி அமைக்கப்பட்டுள்ளது. ரூ.100 கட்டண தரிசனத்துக்கு கீழே தனியாக தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு வரிசையில் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று வளர்பிறை சஷ்டி தினம் என்பதால், சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ரூ.100 கட்டண தரிசன வரிசை முழுவதும் நிரம்பியதால், அதன் அருகே கடும் வெயிலில் பக்தர்கள் தங்களது குடும்பத்தினர், குழந்தைகளுடன் நீண்ட நேரமாக சுவாமி தரிசனம் செய்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக உச்சி வெயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக காத்திருந்த னர். வெயிலின் கொடுமை தாங்க முடியாத பக்தர்கள், தங்கள் குழந்தைகள் மீது துண்டு, துணிகளை போர்த்தியபடியும், விசிறியை வைத்து விசிறியபடியும் நின்றிருந்தனர். முடி காணிக்கை செலுத்திய குழந்தைகள், சித்திரை அக்னி நட்சத்திர வெயிலில் காத்திருக்க முடியாமல் துவண்டன. எனவே, கோடை காலத்தை கருத்தில் கொண்டு ரூ.100 கட்டண தரிசன வரிசையில் செல்வோருக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.