காஞ்சிபுரம்: குன்றத்தூர் முருகன் கோயிலில் குறிஞ்சி பெருமுக திருவிழா இன்று (மே 2-ம் தேதி) நடைபெற்றது.
தமிழ் கடவுளான முருகன் குறத்தி பெண்ணான வள்ளியை திருமணம் செய்து கொண்ட நிலையில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் குன்றத்தூரில் குறிஞ்சி பெருமுக திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ்நாடு இந்து குறவன், மலைக்குறவன், குறிஞ்சி திருமுக பெருவிழா இன்று நடைபெற்றது.
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோயிலில் இருந்து குறவர் இன மக்கள் சீர்வரிசையாக தேன், திணை மாவு, மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு பழங்கள் மற்றும் பால் குடங்களை தலையில் சுமந்தபடி கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பறையிசை முழங்க ஆடல், பாடல் இசைத்தபடி சிலம்பம் சுழற்றியவாறு சீர்வரிசைகளை ஊர்வலமாக எடுத்து நடந்து சென்றனர்.
கொளுத்தும் வெயிலில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக, குன்றத்தூர் மலையில் குன்றின் மேல் அமைந்துள்ள முருகன் கோயிலில் சீர்வரிசையை வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் அங்கிருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சீர்வரிசை பொருட்கள் எடுத்துச் சென்றவர்கள் சிரமப்படாமல் இருக்க சாலை முழுவதும் தண்ணீர் ஊற்றப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.