மாமல்லபுரம்: வேதகிரீஸ்வரர் கோயிலில் சண்டிகேஸ்வரரின் புதிய தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரில் பிரசித்திப் பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் பக்தவச்சேலேஸ்வர் எனப்படும் தாழக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், சுவாமி தரிசனம் செய்வதற்காக நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கோயிலில் சித்திரை திருவிழாவின் போது பஞ்ச ரதங்கள் உற்சவம் நடைபெறும். இதில், சுவாமி மற்றும் விநாயகர், முருகன்,திரிபுரசுந்தரி அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தேரில் வலம் வருவது வழக்கம். இதில், கடந்த 1987-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் சண்டிகேஸ்வர் தேர் சேதமடைந்தது. இதனால், புதிய தேர் செய்ய வேண்டும் என பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன்பேரில், தற்போது வேதமலை வல பெருவிழா குழுவின் செயலாளர் அகஸ்தியகிருபா அன்புசெழியன் நன்கொடையின் மூலம் ரூ.32 லட்சம் மதிப்பில் திருத்தேர் செய்யப்பட்டது. இப்பணிகள் நிறைவடைந்ததால், இன்று புதிய தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில், பக்தவச்சலேஸ்வரர் கோயிலில் இருந்து ஊர்வலமா கொண்டு வரப்பட்ட கலசம் தேரின் மீது வைக்கப்பட்டது. இதையடுத்து ,சிறப்பு ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து, திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில், கோயில் செயல் அலுவலர் புவியரசு, பேரூராட்சி தலைவர் யுவராஜ், அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் என அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து, மாடவீதிகளில் வலம் வந்த தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் நன்கொடையாளர் சார்பில் செய்யப்பட்டிருந்தது.