மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவம் மே 8-ம் தேதி நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மதுரையில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் 12 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
முதல் நாளான நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. இதற்காக சுவாமி சந்நிதியில்இருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் தனித்தனியாக வெள்ளி சி்ம்மாசனத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினர். அங்குள்ள தங்கக் கொடி மரத்தைச் சுற்றிலும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
காலை 10.48 மணியளவில் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர், தர்ப்பைப்புல், மலர்களால் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. இதில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையர் சித்ரா, மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
முக்கிய விழாக்களான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் மே 6-ம் தேதி இரவு 7.35 மணிக்கும், மே 7-ம் தேதி திக் விஜயமும் நடைபெறும். மே 8-ம் தேதி காலை 8.35 மணியளவில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெறும். மே 9-ம் தேதி காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
வைகையில் இறங்கும் கள்ளழகர்: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மே 10-ம் தேதி மாலை 6 மணி முதல் 6.15 மணிக்குள் அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரை புறப்படுகிறார். மே 11-ம் தேதி மூன்று மாவடி யில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெறுகிறது. மே 12-ம் தேதி காலை 5.45 மணியிலிருந்து 6.10 மணிக்குள் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு கள்ளழகர் அருள்பாலிக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.