‘ரங்கா.. கோவிந்தா..’ கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்


ஸ்ரீரங்கத்தில் நேற்று நடைபெற்ற ரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டத்தில் வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள்.படம்: ர.செல்வமுத்துகுமார்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ரங்கா... கோவிந்தா’ கோஷம் விண்ணதிர வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் தைத்தேர், பங்குனித் தேர், சித்திரைத் தேர் என 3 தேர் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். இதில், விருப்பன் திருநாள் என்றழைக்கப்படும் சித்திரைத் தேர் திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் தினமும் நம்பெருமாள் தங்க கருட வாகனம், யாளி வாகனம், யானை வாகனம், தங்க குதிரை வாகனம், பூந்தேர், கற்பக விருட்ச வாகனம் என்று பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேரோட்டம் நேற்று காலை விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த கிளி, மாலை, பட்டு வஸ்திரங்கள் அணிந்து, முத்து பாண்டியன் கொண்டை அலங்காரத்துடன் நம்பெருமாள் நேற்று அதிகாலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு கண்டருளினார்.

பின்னர், அலங்கரிக்கப்பட்ட சித்திரைத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ‘ரங்கா... ரங்கா... கோவிந்தா... கோவிந்தா...’ கோஷங்கள் விண்ணதிர ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். கோயிலைச் சுற்றிலும் 4 சித்திரை வீதிகளில் வலம் வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது.

இதில், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தேரோடும் வீதிகளில் பக்தர்கள் தீபம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.

திருச்சி காவல் துறை ஆணையர் காமினி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சித்திரை திருவிழாவின் 10-ம் நாளான இன்று (ஏப்.27) சப்தாவரணம் நடைபெறும். நாளை ஆளும் பல்லக்கு வைபவத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையர் சிவராம் குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்

x