திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் கிராம மக்களுக்கு வெளிச்சம் பிறப்பது எப்போது ?
பாம்பாற்றை கடந்து கரடு - முரடான பாதையில் பயணித்து தான் பேருந்து நிறுத்தத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டிருப்பதால் பெரும்பாலான மக்கள் வெளியே செல்லக்கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டப்பேரவைக்கு உட்பட்ட ஆண்டியப்பனூர் ஊராட்சியில் 29 குக்கிராமங்கள் உள்ளன. இதில், ஐயங்கொல்லை என்ற குக்கிராமத்தில் 20க்கு மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் விவசாய கூலி வேலை, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களை செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இப்பகுதி மக்கள் வசிக்க கூடிய ஐயங்கொல்லை என்ற குக்கிராமம் காப்புக்காட்டுக்கு உள்ளே ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருப்பதால் இங்கு மின்சாரம் வசதி வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக இருளில் மூழ்கியுள்ள இக்கிராம மக்கள் வெளிச்சம் பிறப்பது எப்போது என எதிர்நோக்கி வருகின்றனர்.
மின்சார வசதி மட்டுமின்றி சாலை வசதி, பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் குழந்தைகளுடன் கடும் துயரத்தில் வாழ்ந்து வருவதாகவும், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து ஜயங்கொல்லை பொதுமக்கள் கூறும்போது, ‘‘ காப்புக்காட்டுக்குள் எங்கள் கிராமம் உள்ளதால் எங்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. கடந்த பல ஆண்டுகளாக மண்ணெண்ணெய் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட், தீப்பந்தம் ஆகியவற்றை பயன்படுத்தி இருளில் வசித்து வருகிறோம்.
எங்களில் சிலர் தொழில் தேவைக்காக கைபேசிகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த கைபேசிகளுக்கு சார்ஜ் போட வேண்டுமென்றால் ஐயங்கொல்லையில் இருந்து 7 கி.மீ., தொலைவுக்கு நடந்து சென்று பக்கத்து ஊரான ஆண்டியப்பனூரில் தெரிந்தவர்களின் வீடுகளில் தான் போட வேண்டிய நிலை உள்ளது.
எங்கள் பகுதிக்கு மின்சார வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் என கடந்த 40 ஆண்டுகளாக மின்வாரிய அலுவலகம், ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என பலரிடம் மனு அளித்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி சார்பில் சோலார் மூலம் வீட்டுக்கு 2 மின் விளக்குகள் (பல்பு) போட்டு கொடுத்தனர்.
ஆனால், அவை சிறிது நாட்களிலேயே பழுதாகி போனதால் தற்போது சோலார் கம்பம் மட்டுமே உள்ளது. மின்விளக்கு வெளிச்சம் இல்லாமல் எங்கள் கிராமம் பழையபடி இருளில் மூழ்கியுள்ளன. இதனால், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி கற்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. மண்ணெண்ணெய், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் மாணவர்கள் படித்து வருகின்றனர். மின்வசதி இல்லாததால் பொழுது போக்கும் இல்லாமல் திண்டாடி வருகிறோம்.
மாலை 6 மணி கடந்ததும் எங்கள் கிராமம் இருளில் மூழ்கி விடும். இதனால், இரவு நேரங்களில் விஷபாம்புகளும், விஷபூச்சிகளும் வீட்டுக்குள் வந்து விடுமோ என்ற அச்சதிலேயே கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.
இது மட்டுமின்றி, ஆண்டியப்பனூர் பேருந்து நிறுத்தம் செல்ல வேண்டும் என்றால் 7 கிலோ மீட்டர் தொலைவக்கு கரடு, முரடான பாதையில் அங்குள்ள பாம்பாற்றை கடந்து செல்ல வேண்டும். அதுவே, மழைக்காலம் வந்து விட்டால் பாம்பாற்றில் பெருக்கெடுத்து ஓடும் மழைவெள்ள நீரை கடந்து செல்ல வேண்டும்.
இது போன்ற காலங்களில் கர்ப்பிணிகள், வயதான மருத்துவமனைக்கு செல்லவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ,மாணவிகள் என அனைவரும் தங்கள் உயிரை பணயம் வைத்து பாம்பாற்று மழை வெள்ள நீரில் மூழ்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழை வெள்ளம் அதிகமாக செல்லும் நேரத்தில் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது.
உள்ளாட்சி மன்ற தேர்தல், சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் வரும்போதெல்லாம் எங்களிடம் வாக்கு கேட்டு வரும் அரசியல் கட்சியினர் இந்த முறை வென்றால் எங்கள் கிராமத்துக்கு மின்சாரம் வசதி செய்து கொடுப்போம், பாம்பாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்து தருகிறோம் என வாக்குறுதிகளை அள்ளி வீசி செல்கின்றனர்.
ஆனால், தேர்தல் முடிந்தவுடன் இந்த பக்கமே யாரும் தலை காட்டுவது இல்லை. நாடு சுதந்திரம் அடைந்து 79ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எங்களுக்கு சுதந்திரம் கிடைப்பது எப்போது ? எங்கள் பகுதிக்கு வெளிச்சம் பிறப்பது எப்போது ? என தெரியாமல் கடந்த 40 ஆணடுகளை கடந்து விட்டோம். இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருப்பது என தெரியவில்லை. எங்களின் நிலைமை கருதி உடனடியாக மின்சாரம் வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்’’ என்றனர்.