பாண்டியர்கள் ஆண்ட மதுரா தான் பட்டினமருதூரா? - தொல்லியல் ஆய்வு நடத்த கோரிக்கை


தூத்துக்குடி: பாண்டியர்கள் ஆண்ட தென்னிந்திய பகுதிகளில் மண்ணில் புதையுண்டுள்ள கீழ்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூர்) தான் மதுராவா என்பதை, தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருவைகுளம் அருகே பட்டினமருதூர் பகுதியில் தொல்லியல் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு வரும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கூறியதாவது: கி.பி.770-ம் ஆண்டின் செப்பேடுகள் மூலம் பாண்டியர்கள் தங்களை விருஷிணி குல மன்னர்கள் என அடையாளப்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் தான் விருஷிணி வழிபாடு எனப்படும் ‘ஐவர் வழிபாடு’ (வாசுதேவன், பலராமன், பிரதியும்னன், சம்பா மற்றும் அனிருத்தன் ஆகியோர் ஒரே கருவறையில் அமர்ந்து அருள் பாலிக்கும்) தொடர்பான ஆலயங்கள் உள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் வட்டெழுத்து கல்வெட்டின் கூற்றுப்படி ‘மா ஏண் ஐவர் வுடை கோஞ்சடே’ எனும் வார்த்தை ‘பெரும் வலிமையான (நிலையான) ஐவர் உடைய கோஞ்சடே’ என்று வேள்விக்குடி செப்பேடுகள் கருத்தை பிரதிபலிக்கும் விதமாகவும், விருஷிணி வீரர்கள் வம்சத்தின் அடையாளத்தை குறிப்பிடுவதாகவும் கருதலாம்.

மத்திய பிரதேசம் பிஸ் நகரில் விருஷிணி வழிபாடு குறித்த தகவல்களுடன் காணப்படும் ‘ஹிலியோடோரஸ் தூண்’ போன்று, தூத்துக்குடி மாவட்டம் வைப்பார் நாகரீகத்தின் அனைத்து கிராமங்களிலும் பெருமாள் ஆலயம் மற்றும் சங்கு, சக்கரம், ஆஞ்சநேயர், ஆழ்வார் சிற்பங்கள் பொறிக்கப்பட்ட தூண்கள் காணப்படுகின்றன.

இத்தகைய ஆலயம் ஒன்று கூட வட இந்தியாவில் இல்லை. அங்கு தூண்கள் மட்டும் தான் உள்ளது என்று 2019ம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறையின் தத்துவவியல் அறிஞரான முனைவர் வினயகுமார் குப்தா என்பவரின், விருஷிணி வழிபாடு தொடர்பாக வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரைகள் வாயிலாக தெரியவருகிறது.

மேலும், இந்த செப்பேட்டில் குறிப்பிட்டுள்ள பாண்டியரான கோச்சடையான் யுத்தம் செய்து வெற்றி கொண்ட மருதூர் என்பதற்கு சான்றாக, இந்த பட்டினம் மருதூர் மற்றும் மேல மருதூர் ஆகிய ஊர்களின் பெயர்கள் அமைகின்றன. மேலமருதூர், மேலஅரசடி, காயலூரணி கோயில்களில் பழங்கால வகை மணல் கற்களாலான விளக்குத் தூண்கள் உள்ளன. முப்புலிவெட்டி கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலில் மிகவும் பழமையான சீரற்ற வடிவ விளக்குத் தூண் உள்ளது. அதில், பாறை ஓவியம் முறையில் முற்கால மனிதர்களால் செதுக்கிச் செய்யப்பட்ட அனுமன், கருடன், சங்கு மற்றும் சுதர்சன சக்கரம் ஆகியவற்றின் சிற்பங்கள் உள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரில் மண்ணில் புதையுண்டு உள்ள மணல் கலவையால் செய்யப்பட்ட தொன்மையான சுமார் 8 அங்குலம் தடிமன் கொண்ட தூணின், மேல்புறம் காணப்படும் ஒரு வித சாவி காடி போன்ற அமைப்பு மற்றும் மண்ணில் தோண்டும் போது சிதைக்கப்பட்டு வெளிவந்த பெருமாள், வள்ளி, சுப்பிரமணியர், சிவகாமி, நந்தி, மச்சமுனி போன்ற தெய்வ திருமேனிகள் ஆகியவை இப்பகுதியில் மிகப்பெரிய கடற்கரை வளாக ஆலயங்கள் இருந்து மண்ணில் மறைந்து உள்ளதை காட்டுகிறது.

தென்மதுரை மற்றும் மதுரா என்பது தற்போதைய வைப்பார் நாகரீகத்தின் பகுதியில் மறைந்த மற்றும் மறைக்கப்பட்ட கீழ்பட்டினம் (தருவை குளம் - பட்டினம் மருதூர் கடற்கரை பகுதி) வணிக நகர நாகரீகம்தான் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் தெற்கிலிருந்து வடக்கே புலம் பெயர்ந்த மக்கள் நடமாட்டம் ஆகியவை இந்த வழிபாட்டு முறை வடக்கே அடைவதற்கு காரணமாக இருக்கலாம்.

கொள்ளிடம் - கன்னியாகுமரி என்ற தலைப்பில், இராபர்ட் ஓரம் வரைந்த வரை படத்தில் தருவைகுளம் பகுதியில் பழைய நதி முகத்துவாரத்தில் குறிப்பிடப்படும் பச்சை நிறத்தில் அடையாளம் இடப்பட்ட தீவு தற்போது பூமியில் காணப்படவில்லை. இதை வைத்து மண்ணில் புதையுண்டுள்ள மதுரா நகரின் பகுதி ஏன் கீழ்பட்டினமாக இருக்கக்கூடாது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இப்பகுதியில் விரைவில் தொல்லியல் ஆய்வுகளை தொடங்கினால் பாண்டியர்களின் தலைநகரான மதுரா இங்கிருந்தது கண்டிப்பாக தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

x