சுருளி அருவியில் சுற்றுலா பயணிகளின் துயரம்... சுகாதார சீர்கேடு, சிதிலமடைந்த சாலைகளால் அவதி!


தேனி: சுருளி அருவிக்குச் செல்ல இயக்கப்பட்ட பேட்டரி கார் பழுதாகியதால் சில ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ளது. இதனால் சிதிலமடைந்த சாலையில் 1 கி.மீ. தூரம் முதியவர்களும், மாற்றுத் திறனாளிகளும் சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளது. மேலும் பூட்டப்பட்ட கழிப்பிடம், அகற்றப்படாத பழைய துணிகள் போன்ற பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளை சுற்றுலாப் பயணிகள் அன்றாடம் எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 8 கி.மீ. தூரத்திலும், உத்தமபாளையத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும் சுருளி அருவி அமைந்துள்ளது. மேகமலையில் உள்ள ஹைவேவிஸ் தூவானம் அணை நீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் அருவியாக இங்கு கொட்டுகிறது. பல்வேறு மூலிகை காடுகளை கடந்து இந்த நீர் வருவதால் இது தீர்த்த அருவி என்றும் அழைக்கப்படுகிறது.

அருவிப் பகுதிக்குச் செல்ல பெரியவர்களுக்கு ரூ.30-ம், குழந்தைகளுக்கு ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. தினமும் காலை 8 முதல் மாலை 4 மணி வரை அனுமதி அளிக்கப்படுகிறது. நுழைவாயிலில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் அருவி அமைந்துள்ளது. இதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு பேட்டரி கார் இயக்கப்பட்டது. இதனால் முதியோர், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் சிரமமின்றி சென்றனர். ஆனால் தற்போது பழுது காரணமாக இது இயக்கப்படவில்லை. அருவிக்கான சாலையும் சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் பலரும் சிரமத்துடன் அருவிக்கு நடந்து செல்லும் நிலையே உள்ளது.

வழியில் உள்ள கழிப்பிடங்களும் பூட்டப்பட்டு கிடக்கின்றன. பெண்கள் உடை மாற்றும் அறையும் பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் பலரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு அருவியில் புனித நீராடுகின்றனர். இதனால் சிலர் ஆடைகளை அங்கேயே விட்டுவிட்டுச் செல்கின்றனர். இவை அவ்வப்போது ஆற்றிலிருந்து அகற்றப்பட்டு அருகிலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல மாதங்களாக அங்கேயே கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், குரங்குகளும் இதை எடுத்து பல இடங்களில் வீசிவிட்டுச் செல்கின்றன. சோப்பு, ஷாம்பு பயன்படுத்த தடை இருந்தாலும் பலரும் இவற்றை பயன்படுத்தி குளிக்கின்றனர்.

முக்கிய சுற்றுலாதலம் என்பதால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் தேவையான வசதிகளும், உரிய பராமரிப்பும் இல்லாததால் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x